Thursday, October 18, 2018

நூல் விமர்சனம்....


நூல் விமர்சனம்


நூலின் பெயர்      :    படிக்கத் தெரிந்த சிங்கம்
ஆசிரியர்                 :    எஸ். ராமகிருஷ்ணன்
வெளியீடு               :    டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கம்                       :    48
விலை                      :   ரூபாய் 30/-

 

            எஸ்.ரா கதை சொல்லி கேட்பது ஒரு சுவாரஸ்யம். சுவாரஸ்யம் என்பதைவிட ஒரு மயக்கம் கொடுத்துவிடும். ஒருமுறை நேரில் சந்தித்தபோது படிக்கத் தெரிந்த சிங்கத்தின் ஒரு வரிக் கதையைக் கூறினார். குழந்தைகள் தினசரிகளை வாசிக்க வைக்க ஒரு சிறார் நாவல் என்றார். எஸ்.ரா செய்யப்போகும் மாயத்திற்காகக் காத்திருந்தேன்.  

           விறுவிறு வாசிப்பு. எட்டு வயது முதல் 12 வயது குழந்தைகளுக்கான புத்தகமாக வந்துள்ளது. அதைவிட சிறிய குழந்தைகளுக்கு வாசித்தும் காட்டலாம். ஒரு தினசரியில் வரும் பல்வேறு செய்திகளில் முக்கியத்துவத்தை ஒரு கற்பனைக்கதை மூலம் காட்டில் அமர்ந்து கதையில் போக்கினைக் கவனிக்க வைக்க முயல்கின்றார்.

           வாவ் என்ற சிங்கம் எப்படி செய்தித்தாள் வாசிக்க ஆரம்பிக்கின்றது, அதைப் பற்றிய செய்தி செய்தித்தாளில் வர என்ன முயற்சிகள் செய்கின்றது, கடைசியாக எப்படி செய்தி வந்தது என்பதே கதையாகும்.  

           இடையில் நிறைய குட்டி குட்டி கதாபாத்திரங்கள்வாத்தியார், எலி, கழுதை, யாழினி என்று.

          இந்தப் புத்தகம் தவற விடக்கூடாத சிறார் புத்தகம் ஆகும். இது போன்ற நூல்களின் வரவே சிறுவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கும். அதற்கான ஒரு முயற்சியே இப் புத்தகமாகும்.

நேர்காணல்....

வைரமுத்து நேர்காணல்



கவிஞர் வைரமுத்துவிடம் சாதாரணமாகவே தமிழ் துள்ளி விளையாடும். அதிலும் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மணிரத்னம் போன்ற இயக்குநரின் படத்துக்கு அவர் பாடல் எழுதும்போது கேட்கவா வேண்டும்?
‘ஓ காதல் கண்மணி’ படத்துக்காகக் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள பாடல்கள் அனைத்தும் மனதைக் கொள்ளையடிக்கும் வகையில் அமைந்துள்ளன. படத்துக்காகப் பயணித்த அனுபவங்களோடு பேட்டிக்குத் தயாரானார்…

மணிரத்னம் - வைரமுத்து - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் பாடல்கள் தனித்து கவனிக்க வைக்கிறதே?
 
மூன்று பேரின் மன உயரம் ஒன்றாக இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். “தண்ணீர்ப் பூக்களுக்குத் தனியாக உயரமில்லை; தண்ணீரின் உயரம் எதுவோ அதுதான் தண்ணீர்ப் பூவின் உயரம். அதுபோல் மனதின் உயரம்தான் மனிதன் உயரம்” என்ற பொருளில் வள்ளுவர் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது.
அவர்களின் மன உயரத்துக்கு நான் இருப்பதாக அவர்கள் நினைப்பதும், என் மன உயரத்துக்கு அவர்கள் பொருந்துவதும்தான் காரணம் என்று நினைக்கிறேன்.


மணிரத்னம் படங்களின் வசனங்களில் உங் களுடைய பங்களிப்பு இருந்திருக்கிறதா?
 
குறைவுதான். மணிரத்னம் பாடல்களில் தனித்தமிழ், நறுந்தமிழ் வேண்டுமென்று விரும்புகிறவர். ‘இருவர்’ படத்துக்காக மட்டும் கொஞ்சம் கவிதை வேண்டும் என்று கேட்டார். மொழியும் மொழி சார்ந்தும், அரசியலும் அரசியல் சார்ந்தும் இருந்த படம் என்பதால் அதில் என் பங்களிப்பு சிறிய அளவில் இருந்தது.


இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்கள் சூழ்ந்த வடிவமாகக் காதல் மாறியிருக்கிறதே. தற்போதைய நிலைக்கு ஏற்றார்போல பாடல் வரிகளையும் மாற்றிக்கொண்டுதானே ஆக வேண்டும்?
 
வாழ்வு மாறுகிற போது மொழியின் தேவையும், உருவமும், வெளிப்பாடும் மாறுகிறது என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். மாதவி, தன் காதலன் கோவலனுக்கு தாழம்பூ மடலில் கவிதை எழுதினாள். அதுவே கால ஓட்டத்தில் பனை ஓலை யாக மாறியது.
பிறகு காகிதத்தில் எழுதப்பட்டது. கடிதமே எழுத முடியாதவர்கள் தூது அனுப் பினார்கள். தற்போது காதலுக்குக் கடிதம் என்பதே ஒழிந்துவிட்டது. கையெழுத்தையே காசோ லைக்கு மட்டும் என்று பயன்படுத்தும் நிலையில் இருக்கிறோம். இந்தக் காலத்து காதலர்களுக்கு வாக்கியம் என்ற புடவை தேவையில்லை. வார்த்தைகள் என்ற சிற்றாடையே போதும்.


சங்க இலக்கியத்தில் தலைவன், தலைவி ‘உடன் போக்கு’ நிகழ்வுகளை எல்லாம் படித்திருக்கிறோம். இதை எல்லாம் இந்தக் காலத்து காதலோடு ஒப்பிட முடியுமா?
 
சங்க இலக்கியத்தில் வாழ்க்கைதான் இலக்கிய மாக இருந்தது. உடன்போக்கு தமிழர்களின் மரபுதான். அப்போது சாதி என்கிற கட்டுமானம் இவ்வளவு இறுக்கமாக இல்லை. சங்க இலக்கியத் தில் கவுரவக் கொலைகள் இருந்ததாகச் சொல்லப் படவில்லை.
ஒரு பெண் குரங்கின் மரணத்தைப் பார்த்து ஒரு ஆண் குரங்கு குன்றின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட பாடல் தான் சங்க இலக்கியத்தில் இருக்கிறது. காத லுக்காக மனிதர்கள் கொலைசெய்யப்பட்டதோ, தற்கொலை செய்துகொண்டதோ இல்லை. முன் னோர்களும் இலக்கியங்களும் இயக்கங்களும் உடைக்கப் பார்த்த சாதி என்கிற கட்டுமானத்தை இன்று தொழில்நுட்பம் உடைத்துக்கொண்டி ருக்கிறது. அடுத்த நூற்றாண்டில் திருமணம் என்ற நிறுவனம் இருக்குமா என்று தெரியவில்லை.


தற்கால சினிமாவில் இலக்கியத்துக்கும், கவிதை களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?
 
எப்போதுமே இலக்கியத்துக்கான பக்கம் கொஞ்சமும், ஜனரஞ்சகத்துக்கான பக்கம் அதிக மாகவும் சினிமாவில் இருக்கிறது. ஆரம்ப காலத் தில் வரலாற்றுப் படங்களும், இலக்கியக் கதை களும் கவிதைகளை வேண்டின. இன்றைய சூழ லில் அது இல்லை. பெண் பாத்திரங்களுக்கு முக் கியத்துவம் உள்ள கதையில்தான் இலக்கியம் இயங்க முடியும். இன்று பெண் பாத்திரத்துக்கான இடம் திரைக்கதையில் இல்லை. ஏன்? சுவரொட்டி களில் கூட கதாநாயகர்கள் மட்டுமே சிரிக்கிறார் கள். பெண்முகங்கள் இல்லை.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆருடன், ஜெயலலிதா வும், ‘நவராத்திரி’ படத்தில் சிவாஜியுடன், சாவித் திரியும், ‘பாட்ஷா’ படத்தில் ரஜினியுடன் நக்மாவும், ‘வாழ்வே மாயம்’ படத்தில் கமலுடன், ஸ்ரீதேவியும் சுவரொட்டிகளில் நின்றார்கள். இன்றைக்கு வருகிற திரைப்படங்களின் சுவரொட்டிகளில் கூட ஆண்களின் ஆதிக்கம்தான் அதிகரித்திருக்கிறது. பெண் கதாபாத்திரங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்ட கதைகளில் இலக்கியத்துக்கு வேலை இருக்காது.


சமீப காலமாக புத்தக காட்சிகளில் அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் விற்றுத் தீர்கிறது. உண்மையாகவே வாசிப்பாளர்கள் அதிகரித்து வருவதாக உணர்கிறீர்களா?
 
வாசிப்புப் பழக்கம் அற்றுப்போகவில்லை. வாசிப்பவன் தீவிர வாசகனாக மாறியிருக்கிறான். தேர்வு செய்து படிக்கிறான். எனது படைப்புகளில் வைகறை மேகங்கள் 33 பதிப்பு கண்டிருக்கிறது. கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் பல பதிப்புகள் கண்டிருக்கின்றன. ஆனால் என் படைப்புகளில் சில படைப்புகள் தேங்கி நிற்கின்றன. ஏன்? வாசகன் தேர்வு செய்து படிக்கிறான். அவன் புத்திசாலி.

Friday, September 14, 2018

           

மணிமேகலை

உலக அறவி புக்க காதை



             “வித்யாதர உலகம் என்ற ஒளி வீசும் வடதிசைப் பகுதியில் தன் கணவன் விஞ்சையனுடன் காஞ்சனபுரம் என்ற நகரில் வசித்து வந்தவள் காயசண்டிகை. காஞ்சனபுரத்தைச் சேர்ந்தவன் என்பதால் இவள் கணவன் காஞ்சனன் என்றும் அழைக்கப்படுபவன். இருவரும் வான்வழி செல்லும் திறன்பெற்றவர்கள். காயசண்டிகை தன் கணவனுடன் வான் வெளியே கிளம்பித் தென்திசை நோக்கிப் பயணித்தாள். பொதிகை மலையைக் காண வேண்டும் என்பது அவர்களுடைய நெடுநாள் கனவு. ஒரு காட்டாற்றின் கரையில் அவளும் அவள் கணவனும் தங்கியிருந்தனர்.

         “அப்போது விருச்சிகன் என்ற பெயருடைய முனிவர் ஒருவர் அங்கே வந்தார். முப்புரி.நூலை அணிந்த அவர், மரவுரி தரித்துக் கழுத்துவரை புரளும் சடைமுடிக் கற்றைகள் அசைய வந்தார். அவர் கையில் ஒரு சிறிய தேக்குமர இலை; அதில் ஒரு நாவல்கனி. அந்த நாவல்கனி மற்ற நாவல் பழங்களைப்போல் இல்லாமல் ஒளிமிகுந்ததாக கனிந்து விளங்கிய அதைப் பார்த்ததும் உண்ண வேண்டும் என்ற ஆவல் மிகும் வண்ணம் இருந்தது. முனிவர் அந்தக் கனியைக் கவனமாக ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு மணம் வீசும் பூக்கள் நிறைந்த பொய்கையில் இறங்கி நீராடச் சென்றார்.

         “காயசண்டிகையின் பொல்லாத நேரம், அக்கனியை உண்ணவேண்டும் என்ற ஆவலைவிட அதன்மேல் ஒருவித அசூயையே அதிகமானது. பிறருடைய பொருள்மீது ஆசைகொள்ளக்கூடாது என்ற எண்ணம் அழிந்தது. திமிராக நடந்து சென்று அந்தக் கனியைத் தன் கால்களால் மிதித்தாள்.
“நீராடி முடித்துவிட்டு கனியை உண்ணலாம் என்ற நினைப்புடன் வந்த விருச்சிகன் காயசண்டிகையால் சிதைக்கப்பட்ட கனியைக் கண்டார்.

        “ ‘அடி பாவி! எத்தகைய தன்மையுடைய நாவல் பழத்தை இப்படிச் சிதைத்துவிட்டாய் என்று உனக்குத் தெரியுமா? சாதாரணப் பழமில்லை இது. தெய்வத்தன்மை வாய்ந்தது. பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கனியும் இந்த அரிய கனியை உண்பவர்களுக்குப் பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பசி ஏற்படாது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கனியை உண்டு மற்ற நேரங்களில் தவம்புரிபவன். அப்படிப்பட்ட கனியை நாசம்செய்து என் தவத்தை நாசம் செய்துவிட்டாயே, பாவி!’ என்று சீறினார்.

“அதோடுவிட்டாரா? சாபமும் கொடுத்தார்.

          “ ‘வானில் பறந்து செல்லும் உன்னுடைய ஆற்றல் செயலற்றுப் போகட்டும். யானைத்தீ என்று அழைக்கப்படும் கடும்பசி நோயால் நீ பனிரெண்டு ஆண்டுகள் அவதிப்படு. மீண்டும் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து நான் இதே போன்ற நாவல் கனியை உண்ணும்போது உன் பசிப்பிணி இளம்பெண் ஒருத்தியால் தீரட்டும்’ என்று சாபமிட்டார்.
 

Thursday, August 9, 2018




குறிஞ்சித்தேன் – தமிழ்ப் பாடநூல் / முதல் பருவம் / 2018

அ. இக்காலக் கவிதைகள்

பாரதியார் – கண்ணன் பாட்டு

1.   கண்ணன் - என் சேவகன்
பாரதி கண்ட சேவகனின் பண்பு

வீட்டு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் அவர்களால் ஏற்படும் தொல்லைகள் கணக்கில்லை. கூலி அதிகம் வேண்டுமென்பார்கள். அப்படிக் கேட்கும் போதெல்லாம் கொடுத்த அனைத்தையும் மறந்து நன்றி கொல்வார்கள். ஒரு நாள் வேலை அதிகமாக வைத்திருந்தால் வேலைக்கு வராமல் வீட்டிலேயே உட்கார்ந்து கொள்வார்கள். மறுநாள் வரும்போது, ஏனடா நேற்று நீ வேலைக்கு வரவில்லை என்று கேட்டால் போதும்… எத்தனை பொய்! பானைக்குள் இருந்து ஒரு தேள் பல்லால் கடித்து விட்டது என்பார். வீட்டில் பெண்டாட்டி மீது பூதம் வந்து விட்டது என்பார். பாட்டி செத்துப்போய் பன்னிரண்டாவது நாள் என்பார். ஓயாமல் பொய் கூறுவார், ஒரு வேலையைச் சொன்னால் அதற்கு மாறாக வேறு வேலையைச் செய்வார். தாயாதியர்களோடு தனியாகச் சென்று பேசுவர்; நம் வீட்டுச் செய்திகளையெல்லாம் ஊரெல்லாம் சென்று பறை அடிப்பது போல் விளம்பரம் செய்வர்; வீட்டில் மிகச்சாதாரணமான பொருளான எள் இல்லை என்றால்கூட, விஷயம் தெரியுமா அவர்கள் வீட்டில் எள் இல்லை என்று பிரச்சாரம் செய்வார். இப்படி வேலைக்காரர்களால் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்த போதும், சேவகர்கள் இல்லாமல் வேலை நடக்கவில்லை.

சேவகனாக வந்த கண்ணன் 

இப்படி நான் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ ஒருவன் வந்து சேர்ந்தான், என்னிடம் வந்து நான் இடைச்சாதியைச் சேர்ந்தவன், மாடுகன்றுகளை மேய்ப்பேன், வீட்டிலுள்ள பிள்ளை குட்டிகளைக் காப்பேன். வீடு பெருக்குவேன், விளக்கேற்றி வைப்பேன், நீங்கள் சொல்லும் வேலைகளையெல்லாம் அட்டியின்றி செய்வேன்; துணிமணிகளை துவைத்து காயவைத்துப் பத்திரப்படுத்தி வைப்பேன், வீட்டிலுள்ள கைக்குழந்தைகளுக்கு இனிமையான பாட்டுப்பாடி ஆட்டங்கள் ஆடி அவை அழாதபடி பார்த்துக் கொள்வேன். வெளியூர் செல்லவேண்டும் என்றால் அது காட்டு வழியாக இருந்தாலும், வழியில் திருடர் பயம் இருந்தபோதும், இரவோ, பகலோ எந்த நேரமாக இருந்தாலும் சிரமத்தைப் பார்க்காமல் தேவரீர் தம்முடன் வருவேன். உங்களுக்குத் துன்பம் எதுவும் ஏற்படாமல் காப்பேன். ஐயா, நான் எதுவும் படித்ததில்லை, நாட்டுப்புறத்தில் வளர்ந்த காட்டு மனிதன். இருந்தாலும் எனக்குச் சில வித்தைகள் தெரியும். சிலம்பம் சுற்றுவேன், மல்யுத்தம் தெரியும், குத்துப் போர் தெரியும், ஆனால் நயவஞ்சனை புரிய எனக்குத் தெரியாது. இப்படிப் பலப்பல சொல்லிக்கொண்டு நின்றான். "அது சரி உன் பெயர் என்ன? சொல்" என்று கேட்டதற்கு, " ஐயனே! ஒண்ணுமில்லே கண்ணன் என்று ஊரில் உள்ளோர் சொல்வார்கள்" என்றான். அவனை ஏற இறங்கப் பார்த்தேன். நல்ல கட்டான உடல். கண்களில் நல்ல குணம் தெரிந்தது. அன்பும் பாசமும் பொங்க அவன் பேசும் சொற்கள் இவைகளால் 'சரி, இவன் நமக்கு ஏற்ற பணியாள்' என்று மனம் மகிழ்ந்து "தம்பி! நன்றாகத்தான் பேசுகிறாய், உன்னைப் பற்றி வானளாவப் புகழ்ந்து கொள்கிறாய், அது கிடக்கட்டும் கூலி எவ்வளவு கேட்கிறாய்? சொல்" என்று கேட்டதற்கு அவன் சொல்லுகிறான். "ஐயனே! எனக்கு தாலிகட்டிய பெண்டாட்டியோ, பிள்ளை குட்டிகளோ எவரும் கிடையாது. நான் ஒரு தனிக்கட்டை. எனக்கு நரையோ, உடலில் சுருக்கமோ ஏற்படவில்லையாயினும் எனக்கு ஆன வயதுக்கு அளவில்லை, தேவரீர் என்னை ஆதரித்தால் போதும், நீங்கள் தரப்போகும் காசு எனக்குப் பெரிசில்லை, நெஞ்சிலுள்ள அன்புதான் எனக்குப் பெரிசு" என்றான். சரி சரி இது ஓர் பழையகால பைத்தியம், பிழைக்கத் தெரியாதவன் என்று எண்ணிக்கொண்டு, மனத்தில் மகிழ்ச்சியோடு, அவனை நான் எனது பணியாளாக ஏற்றுக் கொண்டு விட்டேன். அன்று முதல் அவனுக்கு எங்கள் மேல் அன்பு அதிகமாகிக்கொண்டே வரத்தொடங்கியது. அவனால் நாங்கள் அடையும் நன்மைகளைப் பட்டியலிட்டுச் சொல்லமுடியாத அளவுக்கு அதிகம். கண்களை இமைகள் எப்படிக் காக்கின்றதோ அப்படி அவன் எனது குடும்பத்தைக் காக்கின்றான். ஒரு தடவையாவது வேலையில் சலிப்படைந்து முணுமுணுப்பதைக் காணவில்லை. வீடு வாசல் பெருக்குகிறான், வீட்டை நன்கு துடைத்து சுத்தம் செய்கின்றான், வேலைக்காரிகள் செய்கின்ற குற்றங்களையெல்லாம் கண்டித்து அடக்குகின்றான். அதுமட்டுமா? குழந்தைகளுக்கு அவன் ஆசிரியராக விளங்குகிறான். வளர்ப்புத்தாய் போல் அவர்களுக்கு அனைத்துப் பணிகளையும் தயங்காமல் செய்கின்றான். வைத்தியரைப் போல ஏதாவது உடல்நலக் குறைவு என்றால் அதற்கேற்ற மருந்து கொடுத்து மருத்துவனாகவும் இருக்கின்றான். எல்லோருடனும் சகஜமாக நடந்து கொள்கிறான். ஒரு வேலையிலும் குறை வைக்காமல் வீட்டுக்கு வேண்டிய சாமான்களையெல்லாம் வாங்கி தயாராக வைத்து விடுகிறான். பால், மோர் இவற்றை வாங்கி வைக்கிறான். வீட்டுப் பெண்களுக்குத் தாயைப் போல பிரியமோடு பரிந்து ஆதரித்து நடந்து கொள்கிறான். ஒரு நல்ல நண்பனைப் போலவும், ஒரு மதியூகி அமைச்சன் போலவும், நல்ல ஆசிரியர் போலவும், தெய்வப் பண்புகளோடும், பார்ப்பதற்கு மட்டும் ஒரு வேலைக்காரனாகவும் நடந்து கொள்ளும் இவன் எங்கிருந்தோ வந்து சேர்ந்தானே! இடைச்சாதி என்றல்லவா சொன்னான்! இங்கு இப்படிப்பட்ட தூயவனை நான் வேலைக்காரனாகப் பெற என்ன தவம் செய்து விட்டேன். கண்ணன் என் அகத்தில் கால் வைத்த நாள் முதலாக எண்ணம், விசாரம் (கவலை) எதுவும் அவன் பொறுப்பு என்று விட்டுவிட்டேன். அவன் காலடி எடுத்து என் இல்லத்தில் வைத்த நாள் முதலாய் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், தெளிவே வடிவாம் சிவஞானம், எப்போதும் சிறந்து விளங்கும் நலன்கள் அனைத்தும் ஓங்கி வளர்கின்றன. கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்ணனைக் கொண்டதால் கண் கொண்டேன். கண் கொண்டேன். கண்ணன் என்னை வந்தடைந்து ஆட்கொள்ள காரணமும் இருக்கின்றனவே!



                                 2.  பாரதிதாசன் - தமிழ்ப் பேறு
முன்னுரை:

புரட்சிக்கவி பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் பிறந்தவர். பாரதி மீதுகொண்ட பற்றினால் தன்னுடைய இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டவர். தமிழாசிரியராக பணியாற்றியவர். தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்கள் இதழை நடத்தி வந்தார். திராவிடச் சிந்தனையாளர், தமிழ் மொழிமீது பற்றுடைய இவர் பெரியார், அண்ணா ஆகியோரால் கவனிக்கப்பட்டவர். இங்கே அவருடைய தமிழ்ப் பேறு கவிதையின் சிறப்பை அறியலாம்.

கவிதை ஒன்றை எழுத ஏட்டினை எடுத்தேன். ஏன் என்னைப் பற்றி எழுதக்கூடாதா என்றது வானம். அதற்குள் நீர் ஓடையும் தாமரைப் பூக்களும் தங்கள் தங்களின் அழகை ஓவியமாக ஏட்டில் தீட்டுக என்று உரைத்து நின்றது கற்பனையில். அதனை ஓவியம் தீட்டுவதற்குள் காடும் வயல்வெளிகளும் மழை மேகமும் வந்து என் கண்ணைக் கவர்ந்து அதைப் பற்றி கவிதை எழுதத் தூண்டியது. தோகை விரித்து ஆடுகின்ற மயில் போன்ற இளம் பெண்களெல்லாம் தத்தம் மனதில் இருக்கும் உயிர் அன்பினைச் சித்திரமாக செய்யுங்கள் என்றனர்.

அதற்குள் அழகிய சோலையில் இருந்து வந்த குளிர்ந்த தென்றல் காற்றும், பசுமையான தோகை உடைய மயிலும், அன்னப் பறவைகளும், மாலை நேரத்தில் மேற்கு திசையில் மறைய எத்தனிக்கும் மாணிக்க நிற சூரியன் காட்சியும் கண்முன்னே வருகின்றது. ஏன் வேலைச் சுமந்து இயன்றவரை கொடிநாட்டிய வீரர்களின் தோள் உயர்ந்த எங்கள் பொதியமலை என்று சொல்லி கவிதை தீட்டலாமா? என்றும் தோன்றியது. இப்படி பல்வேறு கற்பனைகள் என்னைச் சூழ்ந்துகொண்டன மலைமலையாய்
இவற்றிடையே, இன்னலில் எம் தமிழ் நாட்டில் உள்ள என் தமிழ் மக்கள் தம் மொழியைக் காக்க முடியாமலும் கட்டாய மொழித் திணிப்புக்கு உள்ளாகியும் துயின்றிருந்தார்.  அத்தகையதோர் காட்சி என்னுள் இரக்கத்தை உண்டாக்கி என் ஆவியில் வந்து கலந்தது. கவிதை எழுத நினைத்த என் சிந்தனை தமிழ் மக்களின் துயரத்திற்கு முடிவுகாண நினைத்தது. அப்படி நினைக்கையில் 'இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்என்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் சத்தமிட்டு சொல்லும் நிலை வரவேண்டும். அப்படி வந்துவிட்டால், துன்பங்கள் நீங்கும், இன்ப வாழ்வு வரும், மனத் தூய்மை உண்டாகும், வீரம் வரும் என்கிற முடிவுக்கு வந்தது.


முடிவுரை :

இந்தி திணிப்பு போராட்டத்திற்கு எதிராகப் பாரதிதாசனின் முடிவைக் காட்டுவதாகத்தமிழ்ப் பேறுகவிதை அமைந்துள்ளது. தமிழ் மொழி, அது வழங்கிய இடம், அவற்றின் வளம், தமிழர்களது பண்பாடு என எல்லாம் சிறந்தோங்கி நிற்கும்போது ஏன் மற்ற மொழியைக் கற்கவேண்டும், எல்லோரும் தமிழ் படிக்கலாமே என்று சொல்கிறார் பாரதிதாசன்.

Friday, October 7, 2016



எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்
அறிவியல் மற்றும் கலையியல் புலம், வடபழனி.
மாதிரித்தேர்வு – முதற்பருவம்,
                      
                  குறியீட்டு எண்: ULT15101
காலம்: 3 மணி                                                                        தமிழ்   - 1                                           மதிப்பெண்கள்: 100

பகுதி –அ – 
எவையேனும் பத்திற்கு ஓரிரு வரிகளில் விடையளிக்க:                                    10 x 3 =30
11.    “மருந்து தின்ற நகக் கணுக்கள் ரணமாகித் தகிக்க “- இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
22.    பாரதிதாசன் குறிப்பிடும் “மாம்பிஞ்சு உள்ளம்” படைத்தோர் யாவர்?
33.    ”அரியினொடு அரியினம் அடர்ப்பபோல்“ -இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
44.    ”பொன் செய் கொல்லன் - தன் சொல் கேட்ட ” -இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
55.    “கண்ணிலாக் குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்” – உவமையை விளக்குக?
66.    உலா குறித்து எழுதுக?
77.    சிறுகதை உலகில் பெண் எழுத்தாளர்களைக் குறிப்பிடுக?
88.    நாவலின் வகைகளை எழுதுக?
99.    புதுக்கவிதை வளர்ச்சியில் வானம்பாடிக் காலப் புதுக்கவிஞர்களை எழுதுக?
110.  உரைநடை ஆசிரியர்களின் பெயர்களை எழுதுக?
111.  நம்பிக்கை எனும் வழிகாட்டி குறித்து ஆசிரியர் எவ்வாறு எடுத்துரைக்கிறார்?
112.   தீய எண்ணங்களைப் போக்க எம்.எஸ்.உதயமூர்த்தி கூறுவன யாவை?

பகுதி – ஆ-  
எவையேனும் ஐந்திற்கு  இரு பக்க அளவில் விடையளிக்க:                        5 x 5 =25
113.  காகிதப் பூக்கள் என்னும்  தலைப்பில் நா. காமராசன் கூறும் கருத்துகளை எழுதுக.
114.  ஒரு பிஞ்சின் வேண்டுகோளாக ஆசிரியர் து. நரசிம்மன் கூறும் கருத்துகளை எழுதுக.
115.  திருக்குற்றாலக் குறவஞ்சியில் இடம்பெற்றுள்ள மலை வளம் குறித்து எழுதுக.
116.  சிறுகதையின் வளர்ச்சி நிலைகளை எடுத்துரைக்க?
117.  தமிழ் இலக்கிய வரலாற்றில் உரைநடை வளர்ச்சிக் குறித்து விளக்கி உரைக்க?
118.  லட்சிய தீபம் என்னும்  தலைப்பில் எம்.எஸ்.உதயமூர்த்தி கூறுவன யாவை?
119.  சரித்திரத்தை மாற்றிய எண்ணங்கள் குறித்து எம்.எஸ்.உதயமூர்த்தி கூறுவன யாவை?

  பகுதி
எவையேனும் மூன்றிற்கு மூன்று பக்க அளவில் விடையளிக்க:                           3 x15 =45
220.  கிளிக்கூண்டு என்னும் கவிதையில் ஆசிரியர் கவிதையின் அழகை எவ்வாறு விவரிக்கிறார்?
221.  கலிங்கத்துப்பரணியின் போர்க்களக் காட்சியை விவரி?
222.  கண்ணகி பாண்டிய மன்னனிடம் வழக்குரைத்ததை நாடகப் பாங்கில் எழுதுக?
223.  சிற்றிலக்கியம்  தோற்றமும் வளர்ச்சியும் குறித்து எழுதுக?
224.  எண்ணங்கள் என்னும் தலைப்பில் எம்.எஸ்.உதயமூர்த்தி கூறும் கருத்துக்களைத் தொகுத்தெழுதுக?