Friday, August 14, 2015

எஸ்.ஆர். எம்.  பல்கலைக்கழகம்  

வடபழனி வளாகம்

 அறிவியல் மற்றும் கலையியல் புலம் 


தமிழ்த்துறை

இளநிலை பட்ட வகுப்பு - முதலாமாண்டு (முதல் பருவம் )

 

                        ...............................................................................

 

 

                     1. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

 
பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
பாரதியார்
மகாகவி எனப் போற்றப்படும் பாரதியார் தேசிய கீதங்கள் என்னும் பிரிவில் அமைந்துள்ள பாரத ஜனங்களின் தற்கால நிலைமையைக் குறித்துக் கூறியுள்ளவற்றைத் தெளிவாகக் காணலாம்.
பேய்களைப் பற்றிய ஐயமும் பயமும்:
பாரதியார் மக்களின் நிலைகெட்ட எண்ணங்களைக் கண்டு நெஞ்சு பொறுக் குதிலையே எங்கிறார். நம் மக்கள் பேய்கள் மரத்தில் உள்ளது, குளத்தில் உள்ளது, மலை உச்சியில் உள்ளது என எண்ணித் துயரப்படுவார்கள். பிறகு இந்த உலகத்தில் அனைத்துப் பொருட்களையும் கண்டு ஐயப்படுவார்கள்.
மந்திரவாதிகளைக் கண்டு பயம்:
நமது மக்கள் பேயைக் கண்டு அச்சப்படுவதோடு மட்டுமல்லாமல் அதை ஓட்டும் மந்திரவாதிகளைக் கண்டும் மனதில் பயம் கொள்கின்றனர். யந்திரம், சூனியம் போன்ற வற்றைக் கண்டு அஞ்சி நடுங்குவார். இவ்வாறு எத்தனை ஆயிரம் துயரம் என எண்ணி நம் பாரதியாரின் நெஞ்சம் பொறுக்க முடியாமல் தவிக்கின்றது.
அரசியல் எண்ணி அயர்வார்:
நம் நாட்டில் உள்ள அரசியலை எண்ணி அஞ்சுகிறார்கள். மக்கள் கொடுக்கும் வரி பணத்தைக் கொண்டே கொடை வழங்கும் அரசர்களின் அரசியலை அறியாமல் மக்கள் அரசனுக்கு அஞ்சுகின்றனர். நமது மக்கள் சிப்பாயைக் கண்டும், ஊர் சேகவனைக் கண்டும், துப்பாக்கி வைத்திருப்பவர்களைக் கண்டும், சிப்பாயைப் போல எவனோ ஒருவன் அணிந்து செல்லும் ஆடையைக் கண்டும் பயப்படுகின்றனர். மேலும் இவர்கள் பூனைகள் போல ஏங்கி அடிமை போல  அஞ்சி நடக்கின்றார்கள்.
பிரிவினை பற்றிய பாரதியின் கருத்து:
இந்த நாட்டில் பிரிவினைகள் பெருகிவிட்டன. அப்பிரிவினைகள் ஒரு கோடி என்று அளவிடமுடியாத அளவிற்குப் பெருகிவிட்டன. சின்னச் சின்னக் காரணங்களுக்காகவெல்லாம் பிரிந்து விடுகின்றார்கள்.
ஒரு தந்தை பாம்புக்கு ஐந்து தலை என்று கூறினால் மகன் பாம்புக்கு ஆறுதலை என்று கூறுவான். இதனால் நெஞ்சு பிரிந்து நெடுநாள் இருவரும் பகைமையோடு இருப்பார்கள்.
மூடத்தனம் பற்றிய ஐயம்:
சாத்திரம் ஒன்றையும் படித்திருக்க மாட்டார்கள். ஆனால் அதை சரியாகப் படிக்காமல் சொல்லும் பொய் சாத்திரப் பேய்களின் வார்த்தைகளை நம்பி பயந்துபோவார்கள். பல மக்கள் அறியாமை மற்றும் கோபத்தின் வழியாக சமயத்திற்காக சண்டையிட்டுக் கொள்வர். ஒரு குலமாக இவர்கள் இருந்தாலும் அவன் சிவபக்தன் என்றும் இவன் அரிபக்தன் என்றும் அடித்துக் கொள்வார்கள்.
ஏழ்மையைக் கண்டு ஐயம்:
கஞ்சி குடிப்பதற்கு வழியில்லாத காரணத்தால் பஞ்சம் பஞ்சம் என்று கூறி பரிதவித்து உயிர் துடி துடித்து இறுதியில் மடிந்துபோகின்றனர். இவர் துயரங்களைத் தீர்க்க வலிமையும் வினையும் இருந்தால் மட்டும் போதும் என்கிறார் நம் பாரதி.
பொறியற்ற விலங்குகள்:
எண்ணில்லா நோய்களால் வலிமையற்று, பார்வையற்ற குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியில் சென்று சிலர் மாட்டிக் கொள்கிறார்கள். பொறியற்ற விலங்குகளைப் போல் பலர் வாழ்கின்றனர். பல கோடி கலைகள் பெருகிய புண்ணிய நாட்டில் பிறந்த மக்கள் அறியாமையுடன் வாழ்கின்றனர். இத்தகைய நிலைமையைக் கண்டு பாரதி நெஞ்சு பொறுக்குதில்லை என்கிறார்.
முடிவுரை:
புலமைகள் பல பெற்ற பாரதி தமது 39வது வயதில் இயற்கை எய்தினார். அவ்வாறாயினும் நமது மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாரதியார்.
  



                  ............................................................................................................................. 






2. உலக ஒற்றுமை
பாரதிதாசன்

பாவேந்தர் எனப் போற்றப்படும் பாரதிதாசன், பாரதியார் மீது கொண்ட பற்றினால் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். இவர் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தம்முடைய 16ஆம் வயதில் முதல் பாடலைப் பாடினார்.
கடுகுபோல் உள்ளம்:
அக்காலத்து மக்கள் தம் கிராமம் முழுவதும் உறவினர்கள் போல் ஒன்றாய் வாழ்ந்தனர்கள். ஆனால், இக்காலத்திலே தன் அருகில் இருக்கும் பிறர் வீட்டில் தங்கியிருப்போர் யார் என்பது கூட அறியாமல் வாழ்கிறோம். தன்பிள்ளை, தன்குடும்பம் , தன் சோறு, தன் வீடு தன் சம்பாத்தியம்  என்று சுயநலம் கொண்டு வாழ்கின்றனர். இத்தகையோர் கடுகுபோல் உள்ளம் கொண்டவர் ஆவார். இவர்களால் தெருவில் உள்ளவர்களுக்குக் கூட பயனில்லை என்று கூறுகிறார் பாவேந்தர்.
துவரை போன்ற உள்ளம்:
சிலர் தங்களது ஊரே கரும்பு போன்றது என்று எண்ணுவர். இவர்கள்  துவரை போன்ற உள்ளம் கொண்டவர் என்கிறார் பாரதிதாசன்.
தொன்னையுள்ளம்:
தன்னுடைய நாட்டின் நன்மைக்காகப் பிற நாட்டின் மக்களைத் துன்புறுத்துவோரைத் தொன்னை உள்ளம் கொண்டவர் என்று குறிப்பிடுகின்றார்.
மாம்பிஞ்சு போன்ற உள்ளம்:
சிலர் ஆயுதங்களைப் பயன்படுத்துவது  தவறு என்றும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் கூறுவர். ஆனால் அவரோ தன் வீடு, நகர், நாடு காக்க சண்டையிடுவர். இத்தகைய உள்ளம் கொண்டவரை மாம்பிஞ்சு உள்ளம் கொண்டவர் என்கிறார்.
அன்புள்ளம் கொண்டவர்:
தூய உள்ளம், அன்புள்ளம், பெரிய உள்ளம் போன்ற உள்ளங்கள் உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றே என்னும் எண்ணம் கொண்ட உள்ளங்களைத் தாயின் உள்ளத்தோடு ஒப்பிட்டு உரைக்கின்றார். அத்தகைய தாயின் உள்ளம் தன்னலமற்றது. தன்னலமில்லாத உள்ளம் என்பது இருந்துவிட்டால் அங்கே சண்டையும் சச்சரவுகளும் ஏற்படாது.
முடிவுரை:

பாரதிதாசனின் இந்தக் கவிதை ஐந்து வகையான உள்ளங்களை முன்மொழிந்து மனித சமுதாயத்தின் மனங்களைப் பிரதிபலிக்கின்றது. கடுகு உள்ளம், துவரை உள்ளம், தொன்னை உள்ளம், மாம்பிஞ்சு உள்ளம், தாய் உள்ளம் என வகைப்படுத்தி  மக்கள் எத்தகைய உள்ளம் கொண்டோராய் இருக்கவேண்டும் என்று எடுத்துரைக்கின்றார்.