சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம்-----மதுரைக்
காண்டம்
வழக்குரை காதை
[பெருஞ் சீற்றத்துடன் வாயிலை யடைந்த கண்ணகி தன் வரவை வாயில் காப்போனால்
அரசனுக்கு அறிவித்துச் சென்று முன்னின்று, அவன் கேட்பத் தன்
ஊர், பெயர் முதலியவற்றையும், தன் கணவனை
அவன் ஆராயாது கொன்ற கொடுங்கோன்மையையும் அஞ்சாது இடித்துரையால் எடுத்தியம்பி,
தன் கணவன் கள்வனல்ல னென்று தெரிவித்தற்பொருட்டுத், தன் சிலம்பினுள் உள்ள பரல் மாணிக்கம் என்றாள் ; அரசன்
தன் தேவி சிலம்பின் பரல் முத் தென்று கூறி, கோவலனிடமிருந்து
கொண்ட சிலம்பை வருவித்து வைக்க, கண்ணகி அதனை உடைத்தாள் ;
உடைக்க, அதிலுள்ள மாணிக்கப் பரல் அரசன்முன்
தெறித்தது ; அது கண்ட நெடுஞ் செழியன் நடுநடுங்கி, 'இழிந்த பொற்கொல்லன் சொற் கேட்ட கொடுங்கோன்மையையுடைய யானோ அரசன்! யானே
கள்வன் ; தென்புலம் காவல் என் முதற் பிழைத்தது ; இன்றே கெடுக என் ஆயுள்' எனக் கூறித் துயருற்று
மயங்கித் தான் அமர்ந்த அரசு கட்டிலில் வீழ்ந்து துஞ்சினான் ; அது கண்ட அரசன் மனைவி கணவனை இழத்தலாகிய கொடுந் துன்பத்தை எண்ணி வருந்தி,
அவன் இணையடிகளைத் தொழுது தானும் விழ்ந்தனள்.]
அரசன்
வினாவும்--- கண்ணகி விடையும்
“தேரா மன்னா செப்புவது உடையேன்…”
“உண்மை தெளியா மன்னனே!
சொல்லுகிறேன் கேள். தேவர்களும் வியக்கும்படி ஒரு புறாவினது துன்பத்தை நீக்கின சிபி
என்னும் செங்கோல் மன்னனும்; தனது அரண்மனை வாயிலில்
கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியை இடைவிடாது அசைத்து ஒலித்த ஒரு பசுவின் துயரைப் போக்க
எண்ணி, அப்பசுவின் துன்பத்திற்குக் காரணமான தனது அரும்பெறல்
மகனைத் தானே தனது தேர்ச் சக்கரத்திலிட்டுக் கொன்றவனான செங்கோல் வேந்தன் மநுநீதிச்
சோழனும் அருளாட்சி செய்த பெரும் புகழை உடைய புகார் நகரம் என்னுடைய ஊராகும்.
புகார் நகரில் மிக்க புகழுடன் விளங்கும்
பெருங்குடி வணிகனான மாசாத்துவான் என்னும் வணிகனது மகனாய்ப் பிறந்து, வாணிகம் செய்து வாழ்தலை விரும்பி,
ஊழ்வினை காரணமாக உனது பெரிய நகரமாகிய மதுரையிலே புகுந்து, இங்கு அத்தொழிலுக்கு முதலாக என்னுடைய காற்சிலம்புகளுள் ஒன்றினை விற்பதற்கு
வந்து, உன்னால் கொலைக்களப்பட்ட கோவலன் என்பான் மனைவி ஆவேன்.
என்னுடைய பெயர் கண்ணகி” என்றாள்.
மன்னன்
கூற்று
“பெண் அணங்கே ! கள்வனைக் கொல்வது செங்கோல் முறைமைக்கு ஏற்றது ஆகும். முறை
தவறாத அரச நீதியே ஆகும்,” என்று மன்னன் விளக்கினான்.
கண்ணகி காட்டும் சான்று
அது
கேட்ட கண்ணகி, “நல்ல முறையில் ஆராய்ந்து
பார்த்துச் செயல்படாத கொற்கை வேந்தனே! என்காற் பொற்சிலம்பு மாணிக்கக் கற்களை
உள்ளிடு பரல்களாக உடையது” என்றாள்.
சான்றினைப் பாராட்டுதல்
அது
கேட்ட மன்னன் உண்மையை அறிவதற்குத் தகுந்த சான்று கூறிய கண்ணகியைத் தன்னுள்
பெரிதும் பாராட்டி, “நல்லது. நீ
கூறியவை நல்ல சொற்கள். எமது சிலம்பு முத்துகளை உள்ளிடு பரல்களாக உடையது.” என்றான்.
கண்ணகி
சிலம்பை உடைத்தல்
மன்னனது
ஆணைப்படி கோவலனிடமிருந்து பெற்ற காற்சிலம்பினை ஏவலர் கொண்டு வந்து தர,
அச்சிலம்பினை வாங்கித் தானே அதனைக் கண்ணகியின் முன் பாண்டியன்
வைத்தான். உடனே கண்ணகி விரைந்து அச்சிலம்பினைக் கையில் எடுத்து மன்னன்
முன்னிலையில் உடைத்தாள். அச்சிலம்பு உடைந்து அதனுள் இருந்த மாணிக்கக் கற்கள்
சிதறுண்டு அரசனுடைய முகத்திலும் பட்டுக் கீழே விழுந்தன.
கண்ணகி
அணிமணிக் காற்சிலம்பு உடைப்ப
மன்னவன்
வாய்முதல் தெறித்தது மணியே
(வழக்குரை
காதை : 71-72)
பாண்டியன் நிலைமை
பாண்டிய
மன்னன் அவ்வாறு சிதறிய மாணிக்கப் பரல்களைக் கண்டவுடன் தனது வெண்கொற்றக் குடை
ஒருபக்கம் விழவும், பிடிதளர்ந்து தனது
செங்கோல் ஒருபக்கம் சாய்ந்து நிற்கவும், “பொற்கொல்லனின்
சொல்லைக் கேட்டு அதனை உண்மையென்று துணிந்த அறிவிலியாகிய யானும் ஓர் அரசன் ஆவேனோ?
இப்பொழுது யானே கோவலனின் சிலம்பைக் கவர்ந்த கள்வன் ஆகின்றேன்.
குடிமக்களைப் பேணிக் காத்து வருகின்ற இத்தென்னாட்டின் பாண்டியர் ஆட்சிச் சிறப்பு
என்னால் பிழைபட்டு விட்டதே; ஆதலால் என் ஆயுள் அழிவதாக”
என்று கூறி மயங்கி அரசு கட்டிலினின்றும் வீழ்ந்தான்.
பொன்செய்
கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ
அரசன் யானே கள்வன்
மன்பதை
காக்கும் தென்புலம் காவல்
என்முதல்
பிழைத்தது கெடுகவென் ஆயுள்என
(வழக்குரை
காதை : 74-77)
இவ்வாறு
அரசன் தன் தவற்றை உணர்ந்ததும், தன்னுயிர்
நீத்து நீதியை நிலை நிறுத்தினான்.
கோப்பெருந்தேவியின் நிலை
அரச மாதேவியின் உள்ளமும் உடலும் நடுங்கின. கணவனை இழந்த கற்புடைய மகளிர்க்கு அந்த இழப்பிற்கு ஈடாகக் காட்டுவதற்கு உலகில் யாதொன்றும் இல்லை. ஆதலால் தன் கணவனுடைய திருவடிகளைத் தொழுது வீழ்ந்தனள்; உயிர் துறந்தனள்.