5
. காகிதப் பூக்கள் – நா. காமராசன்
காகிதப்
பூக்கள் என்னும் இக்கவிதை திருநங்கைகளின் பிறப்பு, அவர்கள் இந்த சமூகத்தில் படும்
துன்பங்கள் ஆகியவற்றை எடுத்துரைப்பதாக அமைகின்றது.
சதுராடும் புதிர்கள்
காலம் என்கிற மழைத்தூறலிலே நாங்கள்
நெல்லின் இடையே வளரும் களை களாகப் பிறப்பெடுத்துள்ளோம். தாய்ப்பாலின் வரலாற்றிலே
ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் சதுரங்க ஆட்டத்திலே உள்ள புதிராக
மாறிப்போனோம் என்று அவர்களது பிறப்பின் வேதனையைக் கவிஞர் கூறுகின்றார்.
சாவின் சிரிப்புகள்
விதைவளர்த்த முள்ளாகவும் விளக்கின்
இருளாகவும், சதை வளர்க்கும் பிணங் களாகவும், சாவின் சிரிப்புகளாகவும் நாங்கள்
உள்ளோம். இப்படி எல்லா நிலையிலும் எங்கள் வாழ்க்கை முரண்பட்டதாகவே காணப்படுகின்றது
என்று கூறுவது போன்று கவிஞர் கூறுகின்றார்.
சந்ததிப் பிழை நாங்கள்
வாய்பேச
இயலாதவர் பாட்டிசைக்க கையில்லாதவர் அதை எழுதிவைக்க கண்பார்வையற்றவர் அதைப்
படித்ததை எங்கேனும் பார்த்ததுண்டா? ஆனால் நாங்கள் வாய்பேச இயலாதவரின் பாட்டானோம்;
கையில்லாதவர் எழுதிய எழுத்தா னோம்; கண்பார்வையற்றோர் அதைப் படிக்கின்றனர். உலகில்
இவையெல்லாம் நடக்காத விஷயங்கள் என்றால் எங்கள் பிறப்பு இவற்றை யெல்லாம் நடந்த
விஷயங் களாக மாற்றுகின்றது.
எழுத்துக்களில்
வரக்கூடிய சந்திப்பிழை போன்று நாங்கள் எங்களின் பரம்பரையில் சந்ததிப் பிழைகளாக
மாறிவிட்டோம். இதை மாற்றக்கூடிய சக்தி எங்களிடம் இல்லை. காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும் என்று கூறுகின்றனர்.
பூவைத்தல் முறைதானோ?
நாங்கள் தலைமீது பூ வைப்போம்,
உலகத்தில் கல்லறை மீது பூ வைப்பது என்பது முறைதானே? எனவே நாங்கள் பூத்த உயிர்
கல்லறைகளாகவே இருக்கின் றோம்.
நாங்கள் காகிதப் பூக்கள்
குழந்தையைப்
பெற்றெடுக்கக்கூடிய பெண்கள் அழகும் வாசமும் நிறைந்த தலையில் சூடக்கூடிய
முல்லைப்பூவாகக் கருதப்படுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாத மலடி என்று
அழைக்கப்படும் பெண்கள் வாசம் உடைய ஆனால் தலையில் சூட இயலாத தாழம்பூவாகக்
கருதப்படுகின்றனர்.
ஆனால்
ஆணாக இருந்து பெண்ணாக மாறிய நாங்கள் என்னதான் பெண் பெண் என்று கூறினாலும்,
பார்ப்பதற்கு பூ போன்று இருந்தும் பூக்குரிய எந்தத் தகுதியும் இல்லாத காகிதப்
பூக்களாகவே கருதப்படுகின்றோம்.
......................................................................................................................................
No comments:
Post a Comment